நடுவழியில் தனியார் பஸ் மீது கல்வீச்சு: டிரைவர் மண்டை உடைப்பு- இளைஞர்கள் 6 பேர் கைது..!

மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து சாலையூர், கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சின் டிரைவராக வீரபாண்டி பிரிவை சேர்ந்த மனோஜ்குமார்(வயது24) என்பவரும், நடத்துனராக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு சாவடியூர் புதூரை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு பஸ்சை மனோஜ்குமார் ஓட்டி கொண்டு இருந்தார். பஸ்சில் 6 பயணிகளும் இருந்தனர்.அப்போது, காரமடை அடுத்துள்ள கெண்டேபாளையம் பகுதியில் சென்ற போது, சாலையின் குறுக்கே இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது, இருசக்கர வாகனத்தை எடுக்குமாறு டிரைவர் கூறினார். இதனால் டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பேருந்தின் மீது சாலையில் கிடந்த கல்லை எடுத்து வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலும், டிரைவர் மனோஜ்குமார் மீது கல்வீசி தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியாகினர். உடனடியாக சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த காரமடை சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹீம், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மனோஜ்குமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொண்டேபாளையத்தை சேர்ந்த ரகுராம்(21), கவுதம்(20), சுதாகர்(24), கவிமணி என்ற பகவதி(21), சுதி ஆனந்த்(22), புங்கம்பாளையம் பிரிவை சேர்ந்த நவீன்குமார்(19) ஆகியோர் தான் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.