ஆட்டோவில் அழைத்து சென்று மூதாட்டியிடம் 4 பவுன் செயின் திருட்டு- 3 பெண்கள் கைவரிசை..!

கோவை புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி பகவதி அம்மாள்( வயது78) இவர் நேற்று உடையாம்பாளையம்- சவுரிபாளையம் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டம் அருகே தனது தங்கையுடன் இஎஸ்ஐ மருத்துவமனை செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்றார். அப்போது 3 பெண்கள் ஆட்டோவில் அங்கு வந்தனர். பகவதி அம்மாளிடம் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டனர். அவர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு என்று சொன்னார்.உடனே அந்த பெண்கள் நீங்கள் பஸ்சில் செல்ல வேண்டாம்.நாங்களும் அந்த பகுதிக்கு தான் செல்கிறோம். எங்களுடன் ஆட்டோவில் வாருங்கள் அங்கு நாங்கள் இறக்கி விட்டு விடுகிறோம் என்று கூறினார்கள்.இதை நம்பிய மூதாட்டியும் அவரது தங்கையும், ஆட்டோவில் ஏறினார்கள். இஎஸ்ஐ மருத்துவமனை சென்றதும் பகவதி அம்மாளும் அவரது தங்கையும் ஆட்டோ விட்டு இறங்கினர். பின்னர் அவர் வைத்திருந்த பர்சை பார்த்த போது அதிலிருந்து 4 பவுன் தங்க செயினை காணவில்லை. இவர்களை ஆட்டோவில் அழைத்து வந்த அந்த 3 பெண்கள் திருடியிருப்பதாக சந்தேகிக்கபடுகிறது. இது குறித்து பகவதி அம்மாள் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பெண்களை தேடி வருகிறார்கள்.