திருமண மண்டபத்தில் பெண்ணிடம் தங்க, வைர நகைகள் திருட்டு – போட்டோ எடுக்க சென்ற கேப்பில் கைவரிசை.!!

கோவை பூ மார்க்கெட். தேவங்கோட்டை வீதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி கிருத்திகா (வயது 31) மாவட்ட கூட்டுறவு வங்கியில் செயலாளராக உள்ளார். இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். மணமக்களுடன் சேர்ந்து போட்டோ எடுப்பதற்காக மேடைக்கு சென்றார். அப்போது அவர் வைத்திருந்த கைப்பையை மேடையில் ஒரு இடத்தில் வைத்துவிட்டு போட்டோ எடுக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கைப்பையை காணவில்லை . அதில் 8 பவுன் தங்க -வைர நகைகள் ,செல்போன், கார் சாவி ஆகியவை இருந்தது. பையுடன் யாரோ திருடி விட்டனர். இது குறித்து கிருத்திகா கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.