பைக்கில் சென்ற நகை வியாபாரி மீது காரை மோத விட்டு ரூ.27 லட்சம் நகை திருட்டு – கோவையில் நள்ளிரவில் துணிகரம்.!!

கோவை செல்வபுரம், அமுல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் பட்டறையில் செய்த 400 கிராம் தங்க நகைகளை கேரளாவில் கொடுப்பதற்காக கோவை ரயில் நிலையத்துக்கு ரயில் ஏறுவதற்காக வந்தார். அவருடன் தனது நண்பர் சாந்தகுமார் ( வயது 43) என்பவரையும் அழைத்து வந்தார். இவர்கள் வந்த பைக் செல்வ சிந்தாமணி குளம் அருகே நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு வந்த போது பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. தில் இருவரும் கீழே விழுந்தனர். காரில் இருந்து இறங்கி வந்த கும்பல் அவர்களிடமிருந்த 400 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டது . இதில் ராஜேந்திரன் சாந்தகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ 27 லட்சம் இருக்கும்.. இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளைக் கும்பலை தேடி வருகிறார்கள்.இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.