ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!!

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ரமேஷ், ரோடிக், அஜித் ,கொலம்பஸ், இமான், லின்சன் ,சவுத்தி ,இஸ்ரேல் ஆகிய 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர், அத்துடன் அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மன்னார் கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கைதான 8 மீனவர்களையும் 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் கிளிநொச்சியில் சிறையில் அடைக்கப்பட்டனர் .இதைத் தொடர்ந்து 11 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 14ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற காவல் முடிந்து இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விடுதலையாகியுள்ளது கவனிக்கத்தக்கது.