சமூக வலைத்தளத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னாவை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் தனிப்படை போலீசார்..!

கோவை:  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோதினி என்ற தமன்னா ( வயது 23) நர்சிங் படித்தவர். இவர் கோவை பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் . இந்த நிலையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு கஞ்சா விற்ற போது தனது ஆண் நண்பர் சூர்யாவுடன் தமன்னாவை பீளமேடு போலீசார் கைது செய்தனர். பின்னர் வெளியே வந்த அவருக்கு ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. இதற்கிடையில் கோவையில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர் .இந்த நிலையில் ரவுடிகளுக்குள் மோதல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கத்தி, வாள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தமன்னா வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தார் .அது வன்முறையை தூண்டு வகையில் இருந்ததால் சைபர் கிரைம் மற்றும் ராமநாதபுரம் போலீசார் தமன்னா மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் அவர் தலைமறைவானார். எனவே அவரைப் பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிபடைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் தமன்னாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-‘தலை மறைவாக இருக்கும் தமன்னாவை தேடி திருப்பூர் ,விருதுநகர், ஆகிய பகுதிகளில் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அவர் திருவாரூரில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தனிப்படை போலீசார் தற்போது திருவாரூர் விரைந்துள்ளனர் .கடந்த மாதம் வரை அவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் தான் சுற்றி வந்துள்ளார். அந்த பகுதியில் பதுங்கி உள்ளாரா ?என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .அவரது செல்போன் எண்ணை வைத்து தேடி வருகிறார்கள். தற்போது அவர் தொடர்பாக சில ரகசிய தகவல்களும் கிடைத்துள்ளது. எனவே விரைவில் அவரை கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.