கோவையில் விபத்தில் மகன் பலியான விரக்தி : தற்கொலைக்கு முயன்ற பெற்றோர் உயிரிழந்த சோகம்

கோவையில் விபத்தில் மகன் பலியான விரக்தி : தற்கொலைக்கு முயன்ற பெற்றோர் உயிரிழந்த சோகம்

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள நாவவூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர். 46 வயதான இவர், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணன் (22) தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ரவி கிருஷ்ணன் கடந்த மாதம் ஒணம் பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாட சென்றுள்ளார். கோவை சிறுவாணி சாலையில் உள்ள செலிபிரிட்டி கிளப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இரவு முழுவதும் தங்கி இருந்த அவர்கள், அதிகாலையில் காரில் வடவள்ளி நோக்கிச் சென்று உள்ளனர். அப்போது தென்னமநல்லூர் பகுதியில் கார் கிணற்றுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ரவிகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். ஒரே மகன் விபத்தில் உயிரிழந்த தகவலை கேட்டதில் இருந்து சஞ்சீவ் சங்கரும், நந்தினியும் விரக்தியில் இருந்து உள்ளனர். இந்நிலையில் மகனுக்கு 40 வது நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட இருந்தது. இதற்காக ஏற்பாடுகள் நடந்த நிலையில், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்து உள்ளனர். இதில் இருவரும் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளனர். அப்போது நந்தினியின் சகோதரர் ஏதேச்சையாக நந்தினுக்கு போன் செய்து உள்ளார். பலமுறை அழைத்தும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார். சஞ்சீவ் சங்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்று உயிரிழந்தார். இது குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.