பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் நிறைவேற்றம்..!!

சென்னை: அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 2-வது நாளாக நடைபெற்றது. 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7ம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கோபால், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ.2,012ல் இருந்து ரூ.7,981 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நடத்துனர்களுக்கு ரூ,1,965 முதல் ரூ.6,640 வரையிலும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.9,329 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலக பணியாளர்களுக்கு ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு ரூ.8,476 வரையிலும் ஊதிய உயர்வு கிட்டும். இதேபோல் பயணசீட்டு பரிசோதகர்களுக்கு ரூ.4,692 முதல் ரூ.7,916 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

90 சதவீத பிரச்சனைகளில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது என சிஐடியூ சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற அரசின் நிபந்தனைக்கு சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மொத்தம் உள்ள 69 தொழிற்சங்கங்களின் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் தவிர மற்ற சங்கங்கள் கைழுத்திட்டன. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த கோரி சிஐடியூ, ஏஐடியூசி வெளிநடப்பு செய்தது.