மாற்று மதம் குறித்து இணையத்தில் அவதூறு கருத்து… சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது..!

மாற்று மதம் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமாக இருப்பவர் கனல் கண்ணன். சில திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். கடந்த மாதம் 18ஆம் தேதி டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

இதுதொடர்பாக, 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார், கனல் கண்ணனிடம் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தம்மிடம் இருந்த வீடியோ தொடர்பான ஆதாரங்களை தாம் வழங்கியதாக தெரிவித்தார்.

இந்நிலையில், விசாரணை முடிந்து கனல் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கனல் கண்ணன் கைதை கண்டித்து வடசேரி பேருந்து நிலையத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூட உள்ளதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டன. இதனை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன..