கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியிடம் கொள்ளை- ஒருவர் கைது..!

கோவை ஒண்டிப்புதூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மகள் செல்வி வேல்மணி (வயது 20) ஆர். எஸ் .புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம். ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25 ஆம் தேதி இரவில் இவர் ஒண்டிப்புதூர் ரயில்வே பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 ஆசாமிகள் இவரை வழி மறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். பின்னர் அவரிடமிருந்த செல்போன், 2 வெள்ளி மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர் .இது குறித்து செல்வி வேல்மணி சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பக்கம் உள்ள லிங்கம் பட்டியை சேர்ந்த அந்தோணி (வயது 31) என்பவரை நேற்று கைது செய்தனர். மற்றொரு கொள்ளையன் அருணகிரியை தேடி வருகிறார்கள்.