காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு.. பாஜக எம்எல்ஏ கைது – உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு.!!

மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு நடத்திய பாஜக எம்எல்ஏ உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபடனாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட் மற்றும் சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட் இருவரும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக புகார் அளிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதில், மகேஷ் கெய்க்வாட்டை, பாஜக எம்.எல்.ஏ. கணபத் கெயிக்வாட் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில், படுகாயமடைந்த மகேஷ் கெய்க்வாட் உள்ளிட்ட 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிசூடு சம்பவம் அப்பகுதியில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதாவது, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஷிண்டே கட்சி நிர்வாகியை கூட்டணி கட்சியான பாஜக எம்எல்ஏ சுட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

மகேஷ் கெய்க்வாட் மற்றும் கன்பத் கெய்க்வாட் இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்ததாகவும், இதற்காக புகாரளிக்க வந்தபோது இந்த சம்பவம் நடந்தாக காவல்துறை கூறியுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு நடத்திய பாஜக எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபடனாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.