சென்னைவாசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்… மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் 2 மடங்கு உயருகிறது.!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டுமே பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் இயங்கி வருகின்றன. வாகனங்களை எத்தனை மணி நேரம் நிறுத்தி வைக்கிறோம் என்பதை குறித்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் பயணம் செய்யாதவர்களும் கூட வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். பரங்கிமலை, திரிசூலம் பகுதிகளில் இருந்து மின்சார ரயில்களில் செல்பவர்கள் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களை தங்களின் வசதிக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். ரயிலில் பயணம் செய்யாமல் வாகனம் நிறுத்தும் இடங்களை பயன்படுத்துவதற்கு கட்டணம் ஆனது நாளை மறுநாள் முதல் உயர்த்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆறு மணி நேரம் வரை வாகனங்களில் நிறுத்துவதற்கு பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நிறுத்துபவருக்கு 15 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும் , 12 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்களின் நிறுத்தி செல்போருக்கு 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும் பார்க்கிங் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர கட்டணமாக ஆறு மணி நேரத்திற்கு 500 ரூபாயிலிருந்து 750 ரூபாய் ஆகும். 12 மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணிப்பதற்கான அடையாள அட்டை வைத்திருப்பதற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.