குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்… மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு..!!

சென்னை: மதுபானங்கள் விலை உயரப்போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விலை உயர்வுக்கான காரணமும் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளுக்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

இப்போது, தமிழ்நாட்டில் 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 7 பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் 1 ஒயின் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.

அந்தவகையில், டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு வருடந்தோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. அதாவது, 2003-04-ம் ஆண்டில் ரூ.3,639.33 கோடியும், 2004-2005-ல் ரூ.4,872.03 கோடியும், 2005-06-ம் ஆண்டில் ரூ.6,030.77 கோடியும், 2006-07-ம் ஆண்டில் ரூ.7,473.61 கோடியும், 2007-08-ம் ஆண்டில் ரூ.8,821.16 கோடியும், 2008-09-ம் ஆண்டில் ரூ.10,601.50 கோடியும் அரசுக்கு வருவாய் கிடைத்தது.

இப்படி வருடாவருடமும், இந்த வருவாயானது ரூ.2 ஆயிரம் கோடி அதிகரித்தபடியே வருகிறது.. கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.33,133.24 கோடியும், 2020-21-ம் ஆண்டில் ரூ.33,811.15 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ.36,013.14 கோடியாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இந்த வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மதுவிலக்கு திருத்த அவசர சட்டம் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்ட மசோதாவில் உள்ளதாவது: “இந்தியாவின் சுங்க எல்லையைக் கடந்தும் தமிழ்நாடு மாநிலத்திற்குள் கொண்டு வரப்படும் ஆயத்தீர்வை விதிக்கத்தக்க அனைத்து பொருட்கள் அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றின் மீது புருப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.450 ரூபாய்க்கு மிகாத அளவில், அரசால் அவ்வப்போது அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கக் கூடியவாறான விதத்தில் சிறப்புக் கட்டணம் விதிக்கப்படுகிறது. சிறப்பு கட்டணத்தின் அதிகபட்ச வீதமானது, அரசினால் 2014-ம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்டது.

அதன் பின்பு சிறப்பு கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் வகையில், ஆயத்தீர்வை விதிக்கத்தக்க அத்தகைய அனைத்து பொருட்களின் மீதும் விதிக்கக்கூடிய சிறப்பு கட்டணத்தின் அதிகபட்ச வீதமானது புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.450-லிருந்து 1000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதற்கிணங்க, 2022-ம் ஆண்டு தமிழ்நாடு மது விலக்கு அவசர சட்டமானது 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி அன்று கவர்னரால் பிரகடனம் செய்யப்பட்டு அது 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதியிட்ட தமிழக அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (ஐஎம்எப்எல்) ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளதால், கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது. முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படுமாம்.அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என்கிறார்கள்..