தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சி சம்பவம்… கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 4 பெண்கள் உயிரிழப்பு-விசாரணைக்கு உத்தரவு .!!

தெலங்கானாவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரங்காரெட்டி மாவட்டம் இப்ராகிம்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி, பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. அதில் 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவர்களில் 4 பெண்கள் இரு தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து அப்பெண்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகாரில் மருத்துவமனை கண்காணிப்பாளர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.

4 பெண்களின் மரணம் குறித்து பொது சுகாதார இயக்குனர் சீனிவாசராவ் தலைமையில் விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. பலியான பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும், ஒரு வீடும் வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில அரசு அறிவித்தது.

குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தது. மேலும், மீதமுள்ள 30 பெண்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.