ஷாக் நியூஸ்… ஹோண்டுராஸ் சிறையில் பயங்கர கலவரம்… 41 பெண் கைதிகள் எரித்து கொலை..

ஹோண்டுராஸின் பெண்களுக்கான சிறையில் கலவரம் வெடித்ததில், 41 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் பெண்களுக்கான ஒரே சிறையில், கலவரம் ஏற்பட்டதில் 41 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது நாட்டின் சிக்கலான சிறை அமைப்பில் நடந்த வன்முறை வெடிப்புகளில் ஒன்றாகும் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அரசு வழக்கறிஞர் அலுவலக செய்தித் தொடர்பாளர் யூரி மோராவின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தில் பெரும்பாலானோர் எரிக்கப்பட்டுள்ளதாகவும், சுடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் புலனாய்வாளர்கள் தேடுதலில் உள்ளதால் இறப்பு எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யூரி மோரா கூறினார்.

இந்த சம்பவம் குறித்து ஹோண்டுரான் சிறைச்சாலை அமைப்பின் தலைவரான ஜூலிசா வில்லனுவேவா கூறும்போது, இந்த கலவர சம்பவம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது திட்டமிடப்பட்ட சம்பவம் என்றும் நாட்டின் சட்ட மற்றும் தண்டனை அமைப்புகள் ஹைஜாக் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

18வது தெரு கும்பல் மற்றும் MS-13 கும்பல் ஆகிய இரண்டு போட்டி கிரிமினல் அமைப்புகளின் பெண் கும்பல் உறுப்பினர்களுக்கு இடையிலான பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதல் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இந்த சிறை மரணங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் கூறினார்.