செந்தில்பாலாஜி வழக்கு… அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் நிராகரிப்பு..!

செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது சரியானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு , அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்ய ஏதுவாக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் காரணமாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை காவிரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்த அமலாக்கத்துறையின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், செந்தில் பாலாஜி வழக்கை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருவதால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடுவது குறித்து நாளை முடிவெடுப்போம்;

உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் மருத்துவக் குழு அமைத்து செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறியலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவில் சந்தேகப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. ஆட்கொணர்வு மனுக்களை கையாள்வதில் நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் , அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தான் உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் சென்னை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவில் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி இறுதி உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 4ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது..