சினிமா தயாரிப்பாளர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரைடு..!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவது தமிழ் திரைப்பட உலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என். அன்புசெழியன். இவர் திரைப்படங்களை தயாரிப்பது, ரிலீசாகும் படத்தை வாங்கி விநியோகிப்பது மற்றும் திரைப்பட பைனான்சியராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சினிமா பைனான்சியர் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் சூளைமேடு பகுதியில் 3 இடங்களிலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது தம்பி வீடு உள்ளிட்ட 10 இடங்களில், மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனைக்கு பின்னரே அன்புசெழியன் எங்கு இருக்கிறார்? ஏதேனும் முறைகேடு செய்துள்ளாரா? என்ற தகவல் வெளியாகும். பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில் கடந்த 2020ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமா நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.