சாட்டிலைட் உதவியுடன் தீ பரவல் தடுப்பு பணி- 140 தீ தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு..!

கோவை வனக்கோட்டத்தில் வறட்சி, வெயில் தாக்கம் காரணமாக தீ பரவும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தீ பரவல் தடுப்பு, வனபாதுகாப்பு, வன விலங்குகளுக்கான தீவனங்கள், குடிநீர் வசதி போன்றவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்ரமணியன் கூறியதாவது:-
கோவை, ஆனைமலை வனக்கோட்டத்தில் காட்டு தீ பரவல் தடுக்க தேவையான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீ தடுப்பு காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. காட்டு பகுதியில் தீ பிடித்தால் எப்படி அணைக்க வேண்டும் என செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 140 தீ தடுப்பு காவலர்களுக்கு தீபிடிக்கும் பகுதியில் பணி வழங்கப்பட்டிருக்கிறது. சாட்டிலைட் உதவியுடன் எந்த காட்டில் எவ்வளவு தூரம் தீ பிடித்து பரவியிருக்கிறது என கண்டறிய முடியும். தீ பிடித்திருந்தால், வனத்தில் பணியாற்றும் 140 பேருக்கு செல்போனில் தகவல் வந்துவிடும்.

அந்த இடத்திற்கு உடனடியாக சென்று தீ அணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வன எல்லைப்பகுதி ரோட்டில் தீ பிடித்தால் தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்த முடியும். காட்டிற்குள் தீ பிடித்தால் செடி, கொடிகளை பயன்படுத்தி தீ அணைக்க முடியும். மண்டல அளவில் தீ பரவல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் (பயர் லைன்) சீரமைப்பு பணிகள் நடக்கிறது. மண்டல அளவில், 25 வனப்பகுதியில் தீ பிடிக்கும் அபாயம் இருப்பதாக தெரிகிறது. இங்கே கண்காணிப்பு பணி அடிக்கடி நடக்கிறது. வனப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று வருபவர்கள், வனப்பகுதி ரோட்டில் செல்பவர்கள், வனத்தில் ஆடு, மாடு மேய்க்க செல்பவர்கள் தீ பிடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்திருக்கிறோம்.

காட்டுப்பகுதியில் வன விலங்குகளின் நீர் தேவைக்காக 40 இடங்களில் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளில் சோலார் போர்வெல் மற்றும் டேங்கர் லாரிகள் மூலமாக நீர் நிரப்பும் பணி நடக்கிறது. வன விலங்குகளுக்கு தண்ணீர், உணவு தேவை பூர்த்தி செய்ய தேவையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்