உத்தர பிரதேசம், தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்களுக்கு ரூ.24,000 கோடி ஒப்பந்தம்..!

புதுடெல்லி: உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் மத்திய அரசு உருவாக்கியுள்ள பாதுகாப்பு தொழில் முனையங்களில் ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், இந்த முனையங்கள் நிறுவனங்கள் மூலம் ரூ.6,200 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன. அதன்படி, உத்தர பிரதேச பாதுகாப்பு தொழில் முனையங்களில் (யுபிடிஐசி) ரூ.2,422 கோடி முதலீட்டை நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

அதேபோன்று, தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் முனையங்கள் (டிஎன்டிஐசி) ரூ.3,847 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளன. யுபிடிஐசி-க்காக இதுவரையில் 105 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.12,139 கோடியாகும். அதேபோன்று டிஎன்டிஐசி-க்காக 53 நிறுவனங்களின் ரூ.11,794 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று மத்திய பாதுகாப்பு துறை இணையமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

பாதுகாப்பு துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தவும், தளவாடங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரண்டு பாதுகாப்பு தொழில் முனையங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் உத்தர பிரதேச பாதுகாப்பு தொழில் முனையத்தை நிறுவியுள்ளது. இந்த தொழில் முனையம், ஆக்ரா, அலிகார், சித்ரகூட், ஜான்சி, கான்பூர், லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது.

அதேபோன்று, தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு தொழில் முனையம் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், சேலம், திருச்சி ஆகிய ஐந்துமுக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு முனையங்கள் ரூ.3,847 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளன.