பழங்குடியினருக்கு ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசாணை வெளியீடு!!

பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.17.18 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல் மற்றும் பள்ளிகள் பராமரிப்பு / பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற உட்கட்டமைப்பு பணிகள் ரூ.17கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.17கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்புசுவர் ஏற்படுத்தும் பணிக்கு ரூ.360.26 இலட்சமும், திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பணை கட்டும் பணிக்கு ரூ.4.95 இலட்சமும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை வசதிகள் ஏற்படுத்துவதற்கு ரூ.557.25 இலட்சமும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு அடிப்படைவசதி ஏற்படுத்துவதற்குரூ.48.40 இலட்சமும், திண்டுக்கல் மாவட்டத்தில் சிமெண்ட் கான்கீரிட் சாலை அமைத்தல் பணிக்கு ரூ.58.00 இலட்சமும், ஈரோடு மாவட்டத்தில் சிமெண்ட் கான்கீரிட் சாலை ஏற்படுத்துவதற்கு ரூ.420.87 இலட்சமும் மற்றும் நாமக்கல், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிக்களுக்கான கட்டிட பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நல மாணவியர் விடுதிக்கு பக்கச்சாலை நடைபாதை அமைத்தல் பணி மேற்கொள்ள ரூ.268.30 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.17,18,03,000/-க்கு (ரூபாய் பதினேழு கோடியே பதினெட்டு இலட்சத்து மூன்றாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.