நாமக்கல்லை சேர்ந்த நாட்டு சர்க்கரை வியாபாரியிடம் ரூ.12.80 லட்சம் மோசடி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் தனசேகர்(36). நாட்டு சர்க்கரை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை குனியமுத்தூர் பிகே புதூரை சேர்ந்த வியாபாரி ஜெய்லாபுதீன்(42) என்பவர் தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனசேகரை தொடர்பு கொண்ட ஜெய்லாபுதீன் நாட்டு சர்க்கரையை அனுப்பி வைக்குமாறும், சரக்கு வந்தவுடன் அதற்குண்டான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனசேகர் ரூ. 12.80 லட்சம் மதிப்பிலான நாட்டு சர்க்கரையை 970 மூட்டைகளில் லாரியில் அனுப்பி வைத்தார். பொருட்களை பெற்றுக்கொண்ட ஜெய்லாபுதீன் அதற்குரிய பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தார். தனசேகர் பல முறை கேட்டும் அவர் காலம் தாழ்த்தி வந்தார். ரூ. 12.80 லட்சத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து விட்டார். இது குறித்து தன்சேகர் நேற்று குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் ஜெய்லாபுதீன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.