போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க வைத்து நூதன தண்டனைகொடுத்த கோவை போலீசார்..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் விபத்துக்களை தடுக்க முடியும். எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என போலீசார் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாநகரில் காந்திபுரம்,லட்சுமி மில் சந்திப்பு,திருச்சி ரோடு,காளப்பட்டி ரோடு பாலக்காடு ரோடு உள்ளிட்ட 15 இடங்களில் நேற்று போலீசார் பள்ளி- கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து விபத்து இல்லாத கோவையை உருவாக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டுனர்களிடம் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனி சிக்னல் அருகேபோலீசார் முகாம் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அந்த வழியாக சாலை விதிகளை பின்பற்றாமல் வந்த வாகன ஓட்டுனர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை அங்கு வரிசையாக நிற்க வைத்து, கைகளை நீட்டி சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வைத்தனர். அதன்படி அவர்கள் தங்களின் கைகளை முன்னோக்கி நீட்டி போலீசார் கூரியவற்றை திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கிடையில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசிக்கொண்டு செல்வது உட்பட போக்குவரத்து விதிகளை மீறி வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து வாகன சோதனை நடந்து வருகிறது.