பேனாக்களை அதிக விலைக்கு விற்ற கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்-கோவை நுகா்வோா் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கடை ஒன்றில் கடந்த 2018 நவம்பரில் விலைப் பட்டியலில் ரூ.100 மதிப்புள்ள இரு பேனாக்கள் சலுகை விலையில் ரூ.90 என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இதனை கோவை, முதலிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உண்மை என நம்பி இரு பேனாக்களை ரூ.90 கொடுத்து வாங்கினார்.
வீட்டுக்கு வந்து பார்த்தபோது அந்த பேனாக்களின் உண்மையான விலை தலா ரூ.20 எனத் தெரியவந்தது. இதையடுத்து கடைக்குச் சென்ற செந்தில்குமார் அதிக விலைக்கு விற்றது குறித்து கேட்டபோது கடை ஊழியர்கள் முறையான பதில் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி செந்தில்குமார் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடை உரிமையாளர் ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்கவும், மனுதாரரின் வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் அளிக்கவும் உத்தரவிட்டது.