கோவை மேயர் வீட்டை அழகுபடுத்த ரூ 1 கோடி நிதியா ..? அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம் ..!

கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையிலையில் திடீரென அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன்,ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே பரபரப்பானது. மேயரின் வீட்டை அழகுபடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியா? ஊழல் நடக்குதுங்கோ, ஊழல் நடக்குதுங்கோ, என்ற பதாகைகளை கையில் ஏந்தி மாமன்றத்தின் முன்பாக தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டத் தொடரை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன்,கோவை மாநகராட்சி மக்களை விரட்டி விரட்டி வாங்கிய வரிகளை மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், கோவை மாநகராட்சி திமுக மேயர் தங்குவதற்கான வீட்டை அழகு படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார்,

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக பராமரிப்பிற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாகவும் கூறினார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் கட்ட பராமரிப்புக்கு ஒரு கோடி என கூறி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த திட்டத்திற்கு எல்லாம் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளதா என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் கோவை மத்திய மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு 6 கோடி ரூபாய் அளவிற்கு வீட்டு வரியை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்தார். வரியை ரத்து செய்த வீடுகள் யாருடையது என்பது இதுவரை தெரியவில்லையென புகார் கூறினார். , இந்த,நடவடிக்கையின் காரணமாக கோவை மாநகராட்சிக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில் மேயர் வீட்டை அழகு படுத்த ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது,முதலமைச்சர், அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோருக்கு அரசு சார்பாக வீடுகள் ஒதுக்கப்படும் அந்த வகையில் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் மேயர் கல்பனாவிற்கு வீடு ஒதுக்கப்பட்டதாக கூறினார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு அந்த வீடு பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளதாக குறிப்பிட்டார். இதன் காரணமாக அரசுக்கு சொந்தமான வீட்டை தான் பராமரிக்கப்படவும், சீரமைக்கவும் உள்ளதாக கூறினார்.