கடனுக்கான ரெப்போ ரேட் 50 புள்ளிகள் உயர்வு- ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அதிரடி அறிவிப்பு.!!

நாட்டின் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் சென்றுவருவதையடுத்து, கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அதிரடியாக அறிவித்தார்.

உணவுப்பொருட்கள், காய்கறிகள் விலை, பெட்ரோல்,டீசல் விலை இன்னும் குறையாததையடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேலும் 50 புள்ளிகள் வரை வட்டி உயர்ந்துள்ளது.

இதனால், தற்போது கடனுக்கான ரெப்போ ரேட் 4.40 சதவீதமாக இருக்கும் நிலையில் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டிருப்பதால், வட்டி 4.90 சதவீதமாக அதிகரிக்கும்.

இதனால் வீட்டுக்கடன், வாகனக் கடன் வாங்கி மாதத்தவணை செலுத்துவோருக்கு இஎம்ஐ செலுத்துவது மேலும் அதிகரிக்கும். கடந்த மாதம் 4ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் ” கடனுக்கான வட்டி வீதம் அடுத்தடுத்து தொடர்ந்து உயரும், ஆனால், எவ்வளவு உயரும் என்று கூற முடியாது. பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தும்வரை உயரும்” எனத் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருவதாலும், பெட்ரோல், டீசல் விலையும் குறையாததாலும் மே மாதத்தில் பணவீக்கம் 7.10 சதவீதம் வரை உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதை முன்கூட்டியே தடுக்கும் வகையில் தொடர்ந்து 2-வதுமுறையாக வட்டிவீதம் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 40 புள்ளிகள் உயர்த்தப்பட்ட நிலையில், ஜூனில் 50 புள்ளிகள் என மொத்தம் 90 புள்ளிகள் உயர்ந்துள்ளன. ரிசர்வ் வங்கியின் 2- மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். அதில் அவர் கூறியதாவது:

கடனுக்கான வட்டிவீதம் அதாவது ரெப்போ ரேட்டை 50 புள்ளிகள் உயர்த்த எம்பிசி குழுவில் உள்ள அனைவரும் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் வட்டிவீதம் 4.90சதவீதமாக அதிகரிக்கும்.

நிலையான டெபாசிட்ட்களுக்கான வட்டிவீதம் 4.65 சதவீதமாகவும், இறுதிநிலைகடன் வசதி எனப்படும் எம்எஸ்எப் வங்கிகளுக்கான வட்டிவீதம் 5.515சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மே 31ம் தேதி தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2021-22ம் நிதியாண்டில் 8.7 சதவீதம் வளரும் என மதிப்பிட்டது. இது 2019-20ம் ஆண்டு இருந்த அளவு வளர்ச்சியாகும்.
இந்த ஆண்டு பருவமழை இயல்பாகத்தான் இருக்கும் பெரிதாக மாற்றம் இருக்காது. கச்சா எண்ணெய் விலை இந்தியாவைப் பொறுத்தவரை சராசரியாக பேரல் 105 டாலர்களை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. ஆதலால் 2022-23ம் ஆண்டில் பணவீக்கம் 6.7சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் பணவீக்கம் 7.5 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 7.4 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 6.2 சதவீதமாகவும், 4-வது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் . இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்