சாம்பாரில் கிடந்த பூரான்: சாப்பிட்ட 50 நாகை அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.!

நாகப்பட்டினத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட முதலாம் ஆண்டு மாணவிகள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது.

இதனை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாணவிகள் சாப்பிட்ட உணவை சோதனை செய்ததில் சாம்பாரில் பூரான் கிடந்தது தெரியவந்துள்ளது. மேலும் மாணவிகள் திடீர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.