கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் – My V3 Ads இயக்குனர் சக்தி ஆனந்தன் உட்பட 180 பேர் கைது..!

கோவையை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம் என்றும், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் மற்றும் வீடியோக்களில் விளம்பரங்களை பார்த்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ 1000 வரை வருமானம் ஈட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை நம்பிய லட்சக்கணக்கான மக்கள் செயலியை பதிவிறக்கம் செய்து பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர் .இதில் மோசடிக்கு வாய்ப்பு உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அந்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் சத்யானந்த் என்ற சக்தி ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக கடந்த வாரம் நீலம்பூர் எல் அன்.டி பைபாஸ் ரோட்டில்மக்கள் திரண்டனர் .இது தொடர்பாக சிங்கநூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என ஏராளமானவர்கள் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அவர்கள் போலீஸ் கமிஷனரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று கூறியதுடன், அலுவலக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் .ஆனால் அவர்கள் கலைந்து செல்லமறுத்தனர். இதனால் சக்தி ஆனந்தன் உட்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் சக்தி ஆனந்தன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..