கணவருடன் நடந்து சென்ற பேராசிரியையிடம் நகை பறிப்பு – வழிப்பறியில் ஈடுப்பட்ட சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது..!

கோவை சாய்பாபா காலனியை அடுத்த ரமனகவுண்டர் லே அவுட்டை சேர்ந்தவர் நிர்மலா (வயது 44). பேராசிரியை.

சம்பவத்தன்று இவர் தனது கணவருடன் அழகேசன் ரோடு முருகன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவர்களுக்கு எதிரே வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அந்த வாலிபர் திடீரென நிர்மலாவின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவி இருவரும் சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களது உதவியுடன் நிர்மலாவின் கணவர் அந்த வாலிபரை துரத்தி பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இதுகுறித்து நிர்மலா சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (48).கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் உக்கடம் மீன் மார்க்கெட் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுப்பட்டது. உக்கடத்தை சேர்ந்த ரெஜின் (19), தோப்பு தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், தெற்கு உக்கடத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ரெஜினை சிறையில் அடைத்தனர். 2 சிறுவர்களையும், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.