பிரதமர் மோடி ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்.. அவருக்கு ஏழைகளின் வலி புரியும்- அமித்ஷா பேச்சு..!

காங்கிரஸ் 56 ஆண்டுகள் நாட்டை ஆண்டபோதிலும் ஓபிசி வகுப்பினருக்கு எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற மோடி சமூகத்தின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, “காங்கிரஸ் எப்போதுமே ஓபிசி சமூகத்தை புறக்கணித்து வருகிறது. அவர்களுக்காக பாடுபடுவது பாஜக தான். காங்கிரஸ் 56 ஆண்டுகள் நாட்டை ஆண்டபோதிலும் ஓபிசி வகுப்பினருக்கு எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9 ஆண்டுகளில் அவர்களுக்காக உழைத்திருக்கிறார். பிரதமர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு ஏழைகளின் வலி புரியும். கர்நாடக தோல்விக்கு பாஜக அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் தான் முக்கிய காரணம். கர்நாடக பாஜக தலைவர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சந்தோஷூம், சி.டி.ரவியும் தன்னிச்சையாக செயல்பட்டதாக எனக்கு புகார்கள் வந்துள்ளன” என்றார்.

அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்ருள்ளார். அவரது பயணத்தின் போது, ​​அவர் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், திறப்பு விழாவும் மற்றும் தேவபூமி துவாரகா, அகமதாபாத் மற்றும் காந்திநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது..