பேக்கரியில் டீ குடிப்பது போல் நடித்து தொழிலாளியின் செல்போனை திருடி தப்பி ஓடிய வாலிபர் கைது..!

கோவை: சிவகங்கையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). இவர் கோவை மதுக்கரை பகுதியில் தங்கி அங்குள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த பேக்கரிக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அங்கு டீ குடித்து கொண்டு இருந்தார். அப்போது தினேஷ்குமார் தனது செல்போனை மேஜையின் மீது வைத்து வேலை செய்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த அந்த வாலிபர், தினேஷ்குமாரின் செல்போனை நைசாக எடுத்து அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயற்சி செய்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.

பின்னர் அந்த வாலிபரை மதுக்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து தினேஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்த மனோஜ்குமார் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மனோஜ்குமார் கைது செய்தனர். அவர் செல்போனை திருடி தப்பி செல்ல முயற்சி செய்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.