குட்டி காவலர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்-தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

குட்டி காவலர் சாலை விழிப்புணர்வு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அடுத்து, ஊஞ்சல், தேன் சிட்டு, கனவு ஆசிரியர் ஆகிய இதழ்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உயிர்’ அமைப்பின் கோவை மாவட்ட அளவில் தொடங்கப்பட்டுள்ள குட்டி காவலர் சாலை விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது , சாலை விதிகளை கவனமாக கடைபிடிப்பேன் . எனது உறவினர்களிடம் சாலை விதிகளை பின்பற்ற கூறுவேன். ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ மாட்டேன். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் கட்டாயம் அணிவேன். நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிவேன்.’ உள்ளிட்ட பல்வேறு சாலை விதிகளை முதல்வர் கூற கோவையில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

அதற்கடுத்ததாக, 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் எனும் இதழ், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேன் சிட்டு எனும் இதழ், ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் எனும் இதழ் ஆகிய இதழ்களை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், டிஜிபி சைலேந்திர பாபு, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரும் கலந்துகொண்டனர்.