மனசுல அதிபர் நினைப்பு.. அதிமுகவை பட்டா போட்டு தரச் சொல்லி அடம் பிடிக்கிறார் இபிஎஸ் – மருது அழகுராஜ் ..!

திமுக என்னும் கட்சியை காப்பாற்ற ஒபிஎஸ் பின்னால் தொண்டர்கள் அணிவகுக்க வேண்டும் என மருது அழகுராஜ் வலியுறுத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:-

அஇஅதிமுகவின் தலைமையை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்” என்னும் கழக நிறுவனர் புரட்சித்தலைவரின் மாற்றவே கூடாத அடிப்படை விதியை தன் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றி தொண்டர்களை புறந்தள்ளிவிட்டு ஜனநாயகத்திற்கு புறம்பான ஒரு சர்வாதிகாரத்தை எடப்பாடி தனது கத்தை பணத்தால் கட்டமைக்க முயற்சிக்கிறார்.

இதற்காக புரட்சித்தலைவியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவியை தூக்கி வீசுகிறார். புரட்சித்தலைவியால் நேசிக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உள்ளிட்ட மூத்த முன்னோடிகளை நீக்குகிறேன் என்கிறார்.

“ஒரு தொண்டன் கூட தலைமைக்கு போட்டியிடலாம்” என்னும் மக்கள் திலகத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாறாக, தலைமைக்கு போட்டியிட பத்து மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், பத்து மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், கூடவே ஐந்தாண்டு காலம் தலைமைக் கழக பதவியில் இருந்திருக்க வேண்டும் என்றெல்லாம் தனக்கு உகந்தாற்போல் விதிகளை திருத்தி வாங்கும் சக்தி படைத்த, தான் மட்டுமே அண்ணா திமுகவை ஆட்டிப்படைக்க வேண்டுமென அதிகாரப் பித்து பிடித்து அலைகிறார். ஒற்றுமை என்பதே கெட்ட வார்த்தை என்கிறார்.

அதிபருக்கு நிகராக தன்னை கருதிக்கொண்டு, கட்சி தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்படாவிட்டால் அஇஅதிமுகவையே அழித்துவிடுவேன் என்பதுபோல் ஆணவத்தில் ஆடுகிறார். ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு முதல் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் வரை தன்னை நோக்கி அலையடிக்கும் விவகாரங்களிலிருந்து தப்பிக்க அண்ணா திமுகவின் தலைமைப் பீடம் தான் தனக்கான பதுங்கு குழி என்பதாக நினைத்துக்கொண்டு,

ஒன்றரை கோடி தொண்டர்களின் உதிரத்தாலும் உழைப்பாலும் ஒப்பில்லா தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்ட கழகமென்னும் கம்பீரக் கோட்டையை, அதன் பொன்விழா ஆண்டில் தன் பச்சை சுயநலத்திற்காக சாதி வாரியாக, மண்டலங்கள் வாரியாக சிதைக்க முற்படுகிறார். இப்படி தனி ஒருவரின் அதிகார வெறியால் அதிமுகவை சூழ்ந்திருக்கும் அபாயத்தை உணர்ந்து அதனைத் தடுக்க மனசாட்சி கொண்ட நிர்வாகிகளுடன் கழகத் தொண்டர்கள் திரள வேண்டும்.

ஜனநாயகம் காத்திட ஒற்றுமையை முன்னெடுக்கும் பெரியகுளத்து பெரியமனத்தார் அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் கழகத்தின் தொண்டர்கள் அணிதிரள்வது ஒன்றுதான் கட்சியை சிலுவையில் ஏற்றத் துடிக்கும் சிலுவம்பாளையத்து அதிகாரப் பித்தர் எடப்பாடியிடம் இருந்து காத்திட முடியுமென்பதை கழகத் தொண்டர்கள் உணர்ந்து, மக்கள் திலகமும் மகராசி அம்மாவும் மடியிட்டு வளர்த்த மகோனத இயக்கத்தை காப்பாற்ற அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் ஓரணியில் திரள்வோம்! அனைத்திய அண்ணா திமுகவின் அவசரமும் அவசியமும் இது ஒன்று தான்!