தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு: திணறும் மக்கள்- அமைச்சர் விளக்கம்.!!

மின் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு 20 தடவைக்கும் அதிகமாக மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அதன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்வெட்டு ஏற்பட்டது. இதேபோல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கடலூர் மாவட்டம் முழுவதும் என மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாகியது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கானை, சிறுவந்தாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை என மின்வெட்டு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்தது. இதனால் தொடர் மின்வெட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. மின் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.