பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை தந்தவர் பிரதமர் மோடி – வானதி சீனிவாசன்.!!

கோவை: பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி. வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூகநீதி பற்றி பேச உரிமை இல்லை. திமுக தலைமை அலுவலகம் சார்பில் ஏப்ரல் 6-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘பல்வேறு துறைகளில் பெண்கள் சாதிக்க திமுக அமல்படுத்திய இடஒதுக்கீடே காரணம், தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சி தொடர்ந்தால் மத்தியில் மட்டுமல்ல, மாநில அரசுகளில் கூட இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத நிலை ஏற்படும்’ என கூறப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி நெருங்க, நெருங்க திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்பது இந்த அறிக்கையில் தெரிகிறது. இந்தியாவில் அரசியல் அதிகாரம்தான் உண்மையான அதிகாரம். அரசியல் அதிகாரம் இருந்தால்தான், ஒருவர் மற்றவர்களுக்கு கொடுக்கும் இடத்திற்கு வர முடியும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பட்டியலினத்தவர் 12 பேர், பழங்குடியினர் 8 பேர், பிற்படுத்தப்பட்டோர் 27 பேர், பெண்கள் 11 பேர் உள்ளனர். சுதந்திர இந்தியாவின் 77 ஆண்டுகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பெண்கள் அதிகம் இருக்கும் மத்திய அமைச்சரவை பிரதமர் மோடியின் அமைச்சரவைதான்.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகிய இருவர் மட்டுமே பெண்கள்.

அமைச்சரவையில் 34வது இடம் அதாவது கடைசி இடம் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் கயல் விழிக்குதான். இதுதான் பெண்கள் வரலாற்றில் இமலாயப் புரட்சியா? 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் நிதியமைச்சராக பெண்ணை நியமித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதுதான் பெண்கள் வரலாற்றில் புரட்சி. இதுதான் உண்மையான சமூக நீதி’ இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.