பைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடி வழக்கு: 73 வீட்டுமனைகள் ஏலம்..!

கோவை பீளமேட்டை தலைமை இடமாகக் கொண்டு பைன் பியூச்சர் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் செந்தில்குமார், விவேக் ஆகியோர் தொடங்கினர். இவர்கள் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிட்டு முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தனர். இதுகுறித்து முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் கோவை உட்பட தமிழகம் முழுவதும் 25,389 பேரிடம் ரூ.189 கோடி மோசடி செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து அந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் செந்தில்குமார், விவேக் ஆகியோரை கடந்த 2013 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விவேக்கின் சகோதரர் நித்தியானந்தன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வழக்கில் அன்னூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 73 வீட்டுமனைகள் ஏலம் விடப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவற்றின் ஏலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது. இதற்கிடையே ஏலம் நடத்தக் கூடாது என்று 4 பேர் வருவாய் அதிகாரி லீலா அலட்சியிடம் மனு அளித்தனர். இருந்த போதிலும் நீதிமன்ற உத்தரவுப்படி தான் ஏலம் நடத்தப்படுகிறது என்று பதில் அளித்து விட்டு ஏலத்தை தொடர்ந்தார். இதில் ரூபாய் 137 கோடி அடிப்படை நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் ஒருவர் ரூபாய் 3 கோடிக்கு ஏலம் எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.