வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன்..!

வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான லயோலா கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : ‘சென்னையில் வெயில் காரணமாக மதிய நேரத்தில் வாக்கு செலுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது. சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும். வாக்குப்பதிவு குறைந்தது, மக்கள் பங்களிப்பின் ஆர்வத்தின் தோல்வியாக பார்க்கப்படுகிறது. வாக்கு செலுத்தியவர்கள் குறித்த முழு விவரம் நாளை (ஏப்.20) மதியம் தெரிய வரும்.சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் நிலையில் மத்திய காவல் படையும், இரண்டாம் நிலையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையும், மூன்றாம் நிலையில் தமிழ்நாடு ஆயுதம் ஏந்திய காவலர்களும், நான்காம் நிலையில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த காவலர்களும் பாதுகாப்பில் இருப்பார்கள். இங்குள்ள கட்டுப்பட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும். அரசியல் கட்சி பிரமுகர்களும் தொடர்ந்து இங்கு கண்காணித்து வருவார்கள்.

வாக்கு பெட்டிகளை பாதுகாக்க தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. அனைத்து தொகுதி வாக்கு பெட்டிகள் வந்தவுடன், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகார்கள் அறையில் சீல் வைப்பர்.

இதன்பின் பாதுகாப்பு பணியில் உள்ளவர்களை தவிர வேறு யாரும் அங்கு செல்ல அனுமதி இல்லை. சென்னையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. சிலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் விட்டுப் போனதாக புகார் வந்தது. கடந்த 3 மாதத்தில் எந்த வாக்காளர் பெயரும் நீக்கவில்லை. இருப்பினும் இது தொடர்பாக விசாரிக்கப்படும்.’ இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்..