அமெரிக்க முன்னாள் அதிபரிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு: எப்.பி.ஐ. அலுவலகத்தில் புகுந்து டிரம்ப் ஆதரவாளர் தாக்குதல் முயற்சி?

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து எப்.பி.ஐ. அலுவலகத்தில் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றதாக புகார் எழுந்துள்ளது.

டிரம்ப் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் போது சில முக்கிய கோப்புகளை கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புளோரிடாவில் உள்ள அவருடைய வீட்டில் சில தினங்களுக்கு முன்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனை சூனிய வேட்டை என்று டிரம்ப் விமர்சித்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டிரம்ப்பின் ரியல் எஸ்டேட் நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் அவரிடம் அட்டர்னி ஜெனரல் விசாரணை நடத்தி வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் ஒகாயோ மாகாணத்தில் சின்சினாட்டி நகரில் உள்ள எப்.பி.ஐ. அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் உஷாராக இருந்ததால் அவர் தப்பி சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

ஃபுளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தியதை அமெரிக்க நீதித்துறை உறுதி செய்துள்ளது. அமெரிக்க சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவி காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும், தேசிய ஆவண காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் ரகசிய ஆவணங்களை டிரம்ப் எடுத்துச் சென்றதால் சோதனை நடத்த நேரிட்டதாக அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதாக கூறிய அவர், விரைவில் உண்மை வெளிவரும் என்றார். வரி சலுகை பெறுவதற்காக டிரம்ப் சொத்து விவரங்களை தவறாக குறிப்பிட்டதாக எழுந்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். டிரம்ப் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனம், தனது நிறுவன மதிப்பை அதிகரித்து காட்டி, மோசடி செய்து கடன் விவகாரங்களில் தில்லுமுல்லு செய்ததாக பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.