சபரிமலையில் மண்டல பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!!

திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது.

மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், சபரிமலை வரும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று காணொலியில் நடைபெற்றது.

கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி சார்பில் அமைச்சர் சந்திரா பிரியங்கா, தமிழ்நாடு, ஆந்திரா தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியது: சபரிமலையில் இவ்வருட மண்டல காலத்திலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.

மேலும், நிலக்கல், செங்கனூர் உள்பட கேரளாவில் 12 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்படும். முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் இந்த மையங்களில் உடனடி முன்பதிவு செய்யலாம். இதற்காக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கொண்டு வரக் கூடாது. பம்பை நதியில் ஆடைகளை வீசக் கூடாது. 15 இருக்கைகளுக்கு குறைவாக உள்ள சிறிய வாகனங்கள் பம்பை வரை செல்ல அனுமதிக்கப்படும். பம்பையில் பக்தர்களை இறக்கி விட்ட பின்னர் அந்த வாகனங்கள் நிலக்கல்லுக்கு திரும்பி விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.