ட்ராவலர் சூட்கேஸ்சில் ரூ.62 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்க கம்பிகள் திருச்சியில் பறிமுதல் – பெண் உள்பட 2 பேர் கைது..!

திருச்சி விமான நிலையத்தில், தள்ளிக் கொண்டு செல்லும் வகையிலான ட்ராவலர் சூட்கேசின் உள்ளே வைத்து, நூதன முறையில் கடத்தி வரப்பட்ட, 62 லட்ச ரூபாய் மதிப்புடைய, ஒரு கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த, ஏர் ஏசியா விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது, ஒரு பெண் பயணி மற்றும் ஆண் பயணி என இருவர் தள்ளிக் கொண்டே வந்த ட்ராவலர் சூட்கேஸ்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில், கம்பிகளாக மாற்றி, மறைத்து கடத்தி வரப்பட்ட, 62 லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை, திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், நூதன முறையில் தங்கத்தை கடத்திய இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.