ஒரே நாடு.. ஒரே தேர்தல்.. வந்தால் மகிழ்ச்சி… மாஜி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி..!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற  தொகுதி அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம்  சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றியை அதிமுக பிடிக்கும். ஈரோடு – சத்தியமங்கலம் மாநில நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மாநில நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைத்தால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மை அல்ல. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மேலும் வலுப்படும். பிரிந்து போன கட்சியினர் மீண்டும் அதிமுகவில் இணையலாம். அவர்களுக்கு பதவியும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, ஒன்றிய செயலாளர்கள் பவானிசாகர் தெற்கு பழனிச்சாமி, சத்தியமங்கலம் தெற்கு சிவராஜ், சத்தியமங்கலம் வடக்கு மாரப்பன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் தமிழ்செல்வி, கொமாரபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், சிக்கரசம்பாளையம் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன், சத்திகிழக்கு கடம்பூர் ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து,  சிவராம்,மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..