தன்னுடன் எடுத்த புகைப்படங்களை காட்டி கோவை பெண் இன்ஜினியரின் திருமணத்தை தடுக்க முயன்ற அதிகாரி கைது..!

கோவை : மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த 30 வயதான பெண் இன்ஜினியர் ஒருவர் தனது பெற்றோர்களுடன் கோவை புதூரில் வசித்து வருகிறார் .இவர் தற்போது கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் புனேவில் வசித்த போது அங்கு தனியார் நிறுவனத்தில் நிதி ஆலோசராக வேலை செய்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பூஜா ஷெட்டி என்பவர் அந்த பெண் இன்ஜினியருடன் பழகினார் .அப்போது அவர் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினாராம்.இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததுடன், அவருடன் பேசுவதையும், அவரை பார்ப்பதையும் தவிர்த்து உள்ளார் .இந்த நிலையில் அந்தப் பெண் இன்ஜினியருக்கும் மற்றொருவருக்கும் இடையே திருமண நிச்சயிக்கப்பட்டது. இதை அறிந்த ராஜேஷ் பூஜா ஷெட்டி நேற்று முன்தினம் கோவைக்கு வந்தார். பின்னர் அவர் அந்தப் பெண் இன்ஜினியருக்கு திருமணம் நடக்க உள்ள செல்வபுரத்தில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு சென்றார் .அந்தப் பெண் இன்ஜினியரை சந்தித்து நான் உன்னை காதலிக்கிறேன் .நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்.என்னுடன் வந்து விடு என்று கூறியுள்ளார் .அதற்கு அவர் உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் நான் உங்களை எப்படி மணந்து கொள்ள கொள்வது என்று கேட்டுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அவர் நாம் இருவரும் சேர்ந்து ஜோடியாக எடுத்த புகைப்படம் என்னிடம் இருக்கிறது .இதை காட்டி உனது திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவேன் என்று மிரட்டினார். பின்னர் பெண்ணின் உறவினர்களிடம் சென்று அவரை எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் ஏமாற்றியதாக தெரிவித்தார், அத்துடன் அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் திருமணத்தை நிறுத்தி விடுவதாக கூறி தகராறு செய்தார். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். திருமண மண்டபத்தில் புகுந்து திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்ற அதிகாரி ராஜேஷ் பூஜா ஷெட்டியை கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.