முன்பதிவு பெட்டிகளில் அரை குறை ஆடைகளுடன் சுற்றிய வடமாநில இளைஞர்கள்… நள்ளிரவில் ரகளை.!!

கொல்கத்தா- கன்னியாகுமரி சிறப்பு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததால் 1 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நேற்று இரவு சென்னைக்கு வந்தது. எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த அந்த ரயிலில், முன்பதிவு பெட்டிகளில், முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் பயணம் செய்துள்ளனர். இதனால் வடமாநிலத்தவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. பெண்கள் அதிக அளவில் பயணித்த பெட்டிகளிலும் வடமாநில இளைஞர்கள் அரைகுறை ஆடைகளோடு இருந்தனர். இதனால் அந்தப் பெட்டியில் உள்ள பெண்கள் மூன்று முறை ரயிலை நிறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரும் வரை ரயிலுக்குள் பெரும் சலசலப்பு நிலவிவந்தது.

ஒருவழியாகச் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்த நிலையில், ரயில்வே ஊழியர்களுடன் தமிழக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “பெண்கள் அதிக அளவு பயணிக்கும் பெட்டிகளில் அரைகுறை ஆடையோடும், உரியப் பயணச் சீட்டு இல்லாமலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பயணிக்கிறார்கள். இதனால் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது” எனத் தமிழக பயணிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மேலும் செங்கல்பட்டு ரயில் நிலைய அதிகாரிகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மற்றும் செங்கல்பட்டு நகர காவல்துறையினர் முன்பதிவு செய்யாமல் பயணித்த வடமாநிலத்தவர்களை இறக்கி வேறு ரயிலில் அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது.