இனி எங்குமே மின்வெட்டு இல்லை – அமைச்சர் ரமேஷ்!

தமிழ்நாட்டில் எந்த இடத்திலேயும் மின்வெட்டு பிரச்சனையே இல்லை. மின்வெட்டு பிரச்சினை அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டது.இருந்த போதும் சிலர் அரசியலுக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டியளித்துள்ளார்.

தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மின்வெட்டு இருந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் பேட்டி கொடுக்கும் இடங்களில் கூட மின்வெட்டு பிரச்சினை இருந்து வருகிறது எனவும் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினையே இல்லை என கூறியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று  திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

போராட்டம் பண்றதுக்கு என்றே சில பேர் இருக்காங்க.. அவங்க பண்ணிக்கொண்டே தான் இருப்பாங்க.. வேலை செஞ்சுக்கொண்டே தான் இருக்கோம். மின் துறை அமைச்சர் மிக தெளிவாக சொல்லியிருக்காங்க, இருந்த பிரச்சினை எல்லாம் சரி பண்ணியாச்சு.. மக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழக முதல்வர் இது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள் என சொல்லியிருக்கிறார். பிரச்சினை எல்லாம் சால்வாகிவிட்டது. எந்த இடத்திலேயும் மின்வெட்டு கிடையாது.. அதை சரி செய்வதற்கு முன்னாடி சில பேர் அரசியல் ஆதாயத்திற்காக இந்த மாதிரியான வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் மக்கள் கிட்ட எடுபடாது.. இங்க கூட நீங்க பாக்கலாம். எவ்ளோ மக்கள் இருக்கிறாங்க.. மகிழ்ச்சியான வரவேற்பு கொடுக்கிறாங்க.. இது எல்லாம் எப்படி அவங்க கொடுக்க முடியும். மக்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால் வரவேற்பு கொடுக்க முடியுமா.. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்றார்.

மேலும் அமைச்சர் ரமேஷ் பேசியதாவது:- “திருச்சி மலைக்கோட்டை கோவிலில் என்னென்ன முன்னேற்றப் பணிகள் செய்ய வேண்டும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுக்குப் பின்பு என்னென்ன பணிகள் செய்ய உள்ளோம் என்பதை அறிவிப்போம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் உலகமே வியக்கும் அளவிற்கு சிறப்பாக நடைபெறும்” என்றார். அப்போது இடைத்தேர்தலில் தவெக அரசிற்கு ஆதரவளித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ரமேஷ், “நாங்கள் எதை குறித்தும் கவலைப்படுவது கிடையாது. எங்களுக்கு எல்லாமே எங்களுடைய முதல்வர். நடக்கக்கூடிய இடைத்தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெறும். மக்கள் இந்த ஆட்சியில் மிகுந்த சந்தோஷமாகவும் தெளிவாகவும் இருக்கிறார்கள். விஜய் தான் இனி தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளார்கள்” என்றார்.சேகர்பாபு குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய ரமேஷ், “முன்னாள் அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை கோவிலில் பொதுவெளியில் கோவிலுக்குள் சென்றது அவமானமா?.. அதிகாரிகளுக்கு வேறு வேலை இல்லையா?.. சேகர்பாபை அழைத்து தரிசனத்திற்காக செல்வதுதான் அவர்களின் வேலையா?.. நான் செல்லும் அனைத்து கோவில்களிலும் மக்கள் செல்லும் பொது வழியில் தான் செல்கிறேன்.. அப்பொழுதுதான் மக்கள் நம்மிடம் பேசுவார்கள்.. அவர்களுடைய குறைகளை கேட்க முடியும். அனைத்து கோவில் குளங்களும் முறையாக தூர்வாரப்படும்” என்று கூறினார்.