நைட் டைம் பஸ்ல போறிங்களா..? இனி போலீஸ் பாதுகாப்போட போகலாம்… சூப்பரான புது திட்டம் அறிமுகம்…

சென்னை புறநகர் இரயல்களில் பாதுகாப்பிற்காக போலீசார் பயணம் செய்வது போல், இரவு நேர பஸ்களில், போலீசாரை பணியமர்த்தும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னையில் ஆங்காங்கே சில குற்றச்சம்பங்கள் நடைபெறுகின்றன.

அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளை ஒப்பிடுகையில், இந்தாண்டு குற்றங்கள் 25 சதவீதம் குறைந்து உள்ளன.

பள்ளி, கல்லுாரி வளாகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளை, காவல் துறை கண்காணித்து வருகிறது.போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். போதை பொருட்களுக்கு எதிராக, 240 பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலும் போதை பொருட்களுக்கு எதிரான தன்னார்வலர்களை ஒன்றிணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பள்ளிகள், கல்லுாரிகள் உள்ள இடங்கள் மற்றும் வழித்தடங்களில், குறிப்பிட்ட நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் புறநகர் ரயில்களில், போலீசார் பாதுகாப்புக்காக பயணிப்பது போல, மாநகர பஸ்களிலும் இரவு நேரங்களில், போலீசார் பயணிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றூ அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல், வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை வசதி ஒதுக்கப்பட்டுள்ளது.அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம் இல்லா பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சீட் எண் 1 மற்றும் 4 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் முன்பதிவு செய்யும்போது இந்த இருக்கைகளை தேர்வு செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.