அடுத்த ரவுண்ட்… வருமான வரி துறை சோதனை… மீண்டும் சிக்கிய எஸ்பி வேலுமணி!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார், இவர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப்டாப்பை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அவரது நண்பர் சந்திரபிரகாஷ் கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு 5-வது நாளாக கே.சி.பி.நிறுவனம், ஆலயம் அறக்கட்டளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இவரது இல்லத்திலும் 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இதில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றபட்டதாக கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. முன்னதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் வேலுமணி வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.