75 கிலோ வெடி மருந்துடன், பண்டல் பண்டலாக தீக்குச்சிகளையும் சேகரித்து கலந்து வைத்திருந்த முபின்- விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான முபினின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து குவியலை போலீசார் கார் வெடித்து சிதறிய சில மணி நேரங்களிலேயே கைப்பற்றினார்கள். 75 கிலோ மதிப்பிலான வெடி மருந்துகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து கொரியர் வழியாக முபின் வாங்கி குவித்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் இந்த வெடி மருந்துகளை வைத்து சக்தி வாய்ந்த குண்டுகளை தயாரிக்க முபின் திட்டமிட்டதும் அம்பலமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான தீப்பெட்டிகளை வாங்கி அதில் உள்ள சிறிய அளவிலான வெடிமருந்தையும் வெடி பொருட்களுடன் முபின் கலந்து வைத்திருந்துள்ளான்.
இந்த வெடி மருந்துகளுடன் தீக்குச்சிகளையும், முபின் கலந்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீக்குச்சிகள் லேசாக உரசினாலே தீப்பற்றி விடும் என்பதற்காகவே முபினும் அவனது கூட்டாளிகளும் தீக்குச்சிகளையும் வெடிபொருட்களாக மாற்றி உள்ளனர். அலுமினிய பவுடர், சல்பர் பவுடர் உள்ளிட்டவைகளையும் முபின் வாங்கி வைத்திருந்தது ஏற்கனவே தெரிய வந்திருந்த நிலையில்தான் தற்போது தீக்குச்சிகளையும் முபின் கூட்டாளிகள் பயன்படுத்தி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. முபினின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து பண்டல் பண்டலாக தீப்பெட்டிகள் மற்றும் தீக்குச்சிகளையும் கைப்பற்றி இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. இப்படி எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை முபினினும் அவனது கூட்டாளிகளும் பார்த்து பார்த்து ரகசியமாக வாங்கி குவித்துள்ளனர். தற்போது வரை கைதாகியுள்ள 6 பேருக்கும் முபினுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததும் விசாரணையில் உறுதியாகி இருக்கும் நிலையில் வெடிபொருட்களை சேகரிப்பதற்கும் இவர்கள் முபினுக்கு உதவிகரமாக இருந்ததும் அம்பலமாகி இருக்கிறது.