மிருதன் பட பாணியில் அடுத்த ஆபத்தா..? மீண்டும் வெளிவந்த ஜாம்பி… 48,500 ஆண்டுகள் பனியில் உறைந்திருந்த வைரஸ் திரும்பி உயிர்ப்பித்து வந்துவிட்டது..!

தி வால்கிங் டெட், ஜாம்பி லேண்ட் என பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், தமிழில் மிருதன் படத்திலும் ஜாம்பியை நாம் பார்த்தது உண்டு.

வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் முற்றிலும் தன்னிலை மறந்து, மிருகமாக மாறி சக மனிதனை கடித்து குதறும் மோசமான விளைவுகளை ஜாம்பி வைரஸ் ஏற்படுத்தும். திரைப்படங்களில் காண்பது கற்பனைக்கதையாகவே இருந்தாலும், நிஜ வாழ்விலும் ஜாம்பி வைரசை ஒத்த விளைவுகள் இப்புவியில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வளிமண்டல வெப்பமயமாதல் காரணமாக உறைபனி உருகுவது, மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களை விடுவிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை மோசமாக்கும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், ரஷ்யாவின் சைபீரியா பகுத்யில் பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த ஏரி ஒன்று பருவநிலை மாற்றம் காரணமாக உருகியுள்ளது. அதில் ஆய்வு செய்த ஐரோப்பாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் பனிப்பாறைகளுக்கு கீழே இருந்து, சுமார் 12 வைரஸ்களை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஆய்வு செய்ததில் அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த “ஜாம்பி வைரஸ்” எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்த போதிலும், அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருப்பது பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இப்போது கண்டறியப்பட்டுள்ள ஜாம்பி வைரஸ்களை ஆய்வு செய்தனர். அதைதொடர்ந்து, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பெரும்பாலும் அமீபா நுண்ணுயிரிகளைப் பாதிக்கும் திறன் கொண்டவையாகவே உள்ளன. இவை மனிதர்களைத் தாக்கும் ஆபத்து மிகவும் குறைவு என்றே தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசும் ஆராய்ச்சியாளர்கள், பனிப்பாறைகள் உருகும் போது இதுபோன்ற பழமையான வைரஸ்கள் வெளிப்பட்டாலும் வெளிப்புற சூழலில் எவ்வளவு காலம் தொற்றாக இருக்கும் என்பதும், தனக்கு பொருத்தமான ஒரு உயிர் மீது எப்படி இது தாக்கும் என்பது மதிப்பிடுவது சாத்தியம் இல்லாதது என கூறுகின்றனர். இருந்தாலும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணிகளால் தொடர்ந்து பனிப்பாறைகள் உருகும் நிலையிலும் ஆர்க்டிக் பகுதியில் அதிக மக்கள் குடியேறுவதும் ஆபத்த்துக்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவிக்கின்றனர்.