மீனாட்சி அம்மன் கோவில் யானையை தாக்கியதில் ரத்தம் கொட்டிய விவகாரம்: உரிய விசாரணை நடத்தப்படும்..!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானையை, ஒருவர் தாக்கியதில் அதற்கு ரத்தம் கொட்டியது. இது அங்கு குவிந்த பக்தர்களுக்கு வேதனையளித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெண் பக்தர் புகார் அளித்துள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில், அம்மனை கோவில் யானை மூன்று முறை சுற்றி வந்தபோத போது, அது பிளிறியது. இதனால் அங்கிருந்த பக்தர்கள் பயந்தனர். அப்போது யானை பாகன் என்று சொல்லப்படும் நபர் யானையை பலமாக குச்சியால் அடித்தார். அப்போது யானைக்கு ரத்த வந்தது. இதை கண்ட பக்தர்கள் வேதனையடைந்தனர். இந்நிலையில் இந்த யானைக்கு ஏற்கனவே உடல் நிலைகுறைவால் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் யானையை அடித்தது பாகன் இல்லை என்றும் அது பாகன் மகன் என்றும் கோவிலுக்கு வந்திருந்த பெண் பக்தர் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் துணை கமிஷனர் அருணாசலம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.