சபரிமலையில் விண்ணை முட்டும் சரண கோஷத்துடன் மண்டல பூஜை நிறைவு: மகர விளக்கு பூஜைக்காக டிச., 30ல் நடை திறப்பு..!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜைக்காக ஆரன்முழா-வில் உள்ள பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்க அங்கி எடுத்துவரப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, கோயிலை வந்தடைந்த 453 சவரன் எடை கொண்ட தங்க அங்கி, ஐயப்பனுக்கு சாற்றப்பட்டு பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, நேற்று காலை 11 மணியளவில் மண்டல பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கின. கோயில் நம்பூதிரிகள், மேல் சாந்தி ஆகியோர் புனித நீருடன் கோயிலை வலம்வந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் தங்க அங்கி சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அப்போது, இசை வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம், விண்ணை எட்டும் அளவுக்கு இருந்தது. இதனைத் தொடர்ந்து, மண்டல பூஜை காலம் நிறைவடைந்து, ஹரிவராசனம் பாடி, இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.