காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல் (27). இவரும் தர்மபுரியை சேர்ந்த பவித்ரா (24) என்பவரும் கடந்த 2018 – ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவி இருவரும் கோவை வந்தனர். பீளமேடு காந்தி மாநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இமானுவேல் கார் டிரைவராக வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் அவர்களே சமாதானம் அடைந்து கொள்வார்கள். சம்பவத்தன்று இமானுவேல் வேலைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது பவித்ரா வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த இமானுவேல் அவரிடம் சென்று கேட்டார். அதற்கு அவர் தான் விஷத்தை குடித்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பவித்ராவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பவித்ராவை , இமானுவேல் கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.